கல்லூரி படித்து கொண்டு இருந்த காலத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை அன்று மதிய நேரம் வழக்கம் போல் மாணவர்கள் எல்லோரும் கட் அடிக்க திட்டம் போட்டனர். வெள்ளிக்கிழமை மதியம் என்றால் சினிமாவுக்கு சென்று ரகளை செய்வது தான் வழக்கம். அன்றும் அதே மாதிரி எல்லோரும் தயாராகி கொண்டு இருக்க என்ன படம் போகலாம் என்ற கேள்வி வந்த போது ஏதோ ஒரு புது பையன் நடிச்சிருக்கான் அவன் படத்துக்கு போகலாம் என்று சிலர் சொன்னார்கள். எதுக்குடா கண்ட கண்டவன் நடிச்ச படத்துக்கெல்லாம் போகனும் நம்ம தியேட்டரில் ஷகீலா படம் போட்டிருக்கான். அங்கே போனா குடுத்த காசுக்கு ஏதாவது பாத்துட்டு வரலாம் என்று குரூப்பில் உள்ள ஒரு அனுபவஸ்தர் சொல்ல அதற்கு முதல் நண்பர் டேய் மச்சான் இதுவும் ஷகீலா படம் மாதிரி தான்டா இருக்கும். அதுல ஒரு சோப்பு போடுற சீன் எல்லாம் இருக்குடா. இதுல என்ன கொடுமைனா இந்த படத்தை இயக்கியது அந்த பையனோட அப்பாவாம் என்று அந்த படத்தின் குவாலிபிகேஷன்களை அவர் அடுக்க ஒருவழியாக எல்லோரும் பிட்டு படம் பார்க்க கிளம்பிவிட்டார்கள். மச்சான் எனக்கு ஏற்கனவே தலை வலிக்கிற மாதிரி இருக்கு என்னை மேலும் டார்ச்சர் பண்ணாதீங்க என்று சொல்லி நான் எஸ்கேப் ஆகிவிட்டேன்
அந்த படத்தில் நடிச்ச புது பையன் இன்று தமிழ் சினிமாவில் பெரிய ஆள். சந்திரமுகி மட்டும் வந்து இவரது சச்சினை காலி பண்ணவில்லை என்றால் இன்று எல்லா ரஜினி மன்றங்களும் விஜய் மன்றங்களாகி இருக்கும். பாபா தோல்விக்கு பின் ரஜினி ரசிகர்களை குறிவைத்து வலைவீசி வந்தார்கள். ரஜினி அரசியலுக்கு அதோ இதோ என்று இன்னும் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டு இருக்க. விஜயகாந்த் உள்ளே இறங்கி அதகளப்படுத்த நம்ம விஜய்யும் இப்போதே அஸ்திவாரம் போட்டு வருகிறார். ஜே.கே.ரித்தீஷ் அதிரடியாக அரசியலில் குதித்து எம்.பி. ஆகிவிட்டது வேறு இவரின் அரசியல் பிரவேசத்தை இன்னும் தள்ளி போடக்கூடாது என்ற நிலைக்கு தள்ளிவிட்டது. இவருக்கு உண்மையிலேயே அரசியல் ஆசை இருக்கிறதோ இல்லையோ இவரது தந்தைக்கு நிரம்பவே இருக்கிறது. போஸ்டர்களில் எல்லாம் விஜய், எம்.ஜி.ஆர். உடன் அவரது தந்தை தவறாமல் இடம் பெற்றுவிடுகிறார். அதுவும் எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கண்ணாடி வேறு அணிந்து கொள்கிறார்
இந்த மாதம் விஜய்யின் பிறந்தநாள் வருகிறதாம் அன்று கண்டிப்பாக விஜய்யின் அரசியல் குறித்து அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உண்ணாவிரத மேடையில் நம் உண்ணாவிரதம் வெற்றி, நமக்கு கிடைத்த பிரியாணி ஆர்டர்கள் இதை சொல்கின்றன என்று பேசி அரசியலை கலகலக்க வைத்தனர். இதே மாதிரி பல கலாட்டாக்கள் நடக்கலாம் என்று எதிர்பார்ப்பு கூடிக் கொண்டே போகிறது
பிரியாணி பொட்டலத்தை தொண்டர் முகத்தில் விசிறி அடித்து விஜயகாந்த் புரட்சி செய்தார், விஜய் தரப்போ உண்ணாவிரத மேடைக்கே பிரியாணியை வரவழைத்து புரட்சி செய்தது. தொடர்ந்து மொக்கைகளாக கொடுத்து வந்த விஜயகாந்துக்கு தொப்புளில் பம்பரம் விட்ட படம் வந்து கைகொடுத்தது. ஆனால் பம்பரம் சின்னம் வேறொரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால் கிட்டத்தட்ட அதே மாதிரி இருக்கும் சின்னம் அவருக்கு கிடைத்தது. அதே மாதிரி விஜய்க்கும் சோப்பு படம் ஓரளவுக்கு கைகொடுத்தது. அவருக்கு என்ன சின்னம் கிடைக்கும் என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்
1 comments:
welcome frineds
Post a Comment